Thursday, March 19, 2009

ஒரு தாயின் கல்லூரிக் கனவு

"அம்மா, 5 மணிக்கு புரோகிராம் தொடங்கிடுவாங்க, சீக்கிரம் வந்துடுங்க, இல்லைனா பின்னாடி தான் உட்கார இடம் கிடைக்கும்" என்று சொல்லிக் கொண்டே, காலணியை மாட்டிக் கொண்டிருந்தாள் சௌமியா. "அக்கா எப்போ வருவா? அவளையும் கரெக்ட் டைம்க்கு வந்துட சொல்லுங்க, நான் கெளம்பறேன்" என்று காலில் சக்கரம் கட்டாத குறையாய் பறந்தாள். இன்று தான் அவளை எல்.கே.ஜி. சேர்க்க, பள்ளியில் சென்று விட்டு வந்தார் போல் தோன்றுகிறது, அதற்குள் கல்லூரி முடித்து, இதோ இன்று பட்டம் பெறுகிறாள்.


குடும்ப சூழ்நிலைகள் காரணமாக, படிக்கும் ஆர்வமிருந்தும் கல்வியைத் தொடர முடியாமல் போனதால், தன் குழந்தைகளையாகிலும் நன்கு படிக்கவைக்க வேண்டுமென்ற ஆர்வம் சௌமியாவின் பெற்றோர் இருவருக்குமே இருந்தது. மூத்த மகள் பள்ளிப்படிப்பை முடித்தவுடன், அவளைக் கல்லூரிக்கு அனுப்புவது அவர்களுக்கு பெரும்பாடாய்ப் போனது. கல்லூரியில் சென்று படித்தால் தான் கொஞ்சமாகிலும் அவளுக்கு உலக ஞானம் வரும் என்பதால், அவளை மிகவும் கட்டாயப்படுத்தி தான் கல்லூரியில் சேர்த்தனர். கல்லூரியில் சேர்ந்த பிறகு அவள் கொஞ்சம் பக்குவப்படத் தொடங்கினாள் என்பதும் அவர்கள் எதிர்பார்த்தபடியே நடந்தது.


தொலைகாட்சி நிகழ்ச்சி ஒன்றில் கல்லூரி மாணவர்களுக்கான பாட்டுப் போட்டி நடந்து கொண்டிருக்க, மகள்களின் கல்லூரி மாணவிகள் பாடி முடித்ததும், "அருமையா பாடினாங்க இல்ல?" என்றால் சௌமியாவின் தாய். அவளை வம்பிற்க்கிழுப்பது என்ற முடிவிலிருந்த சௌமியா, "இல்லம்மா, எங்க காலேஜ் செம்ம சொதப்பல், நீ வேணும்னா பாரேன், கண்டிப்பா தோற்க போறாங்க" என்று சொல்ல, "இல்ல இல்ல, உங்க காலேஜ் தான் கண்டிப்பா ஜெயிக்கும் பாரு" என்றாள். "அந்தக் காலேஜ்ல படிச்ச எங்களைவிட உங்களுக்கென்ன அப்படி ஒரு மோகம் எங்க காலேஜ் மேல" என்றாள் சௌமியாவின் அக்கா. "அக்காவைப் பெண் பார்க்க வரவங்க, 'பொண்ணு என்ன படிச்சிருக்குனு?' கேட்டா, அம்மா ஸ்டெல்லா மாரிஸ் காலேஜ்ல பி. எஸ். சி படிச்சான்னு தான் சொல்லுவாங்க" என்று தாயைக் கேலி செய்தாள் சௌமியா. உடனே அவளின் சகோதரியும் அவளுடன் சேர்ந்து கொண்டு, "அது மட்டுமில்ல, சின்னவ கூட அதே காலேஜ் தான், இதையும் சேர்த்து தான் சொல்லுவாங்க" என்று அவள் பங்கிற்கு அவள் அம்மாவைக் கிண்டலடித்தாள்.


பள்ளி விடுமுறைகளில் குழந்தைகளை அழைத்துக் கொண்டுத் தாய் வீட்டிற்கு செல்வது வழக்கமாயிருந்தது சௌமியாவின் தாய்க்கு. இராயப்பேட்டையில் இருந்த அவளின் தாய் வீட்டிற்கு செல்லும் போது, இந்தக் கல்லூரியைக் கடக்கும் போதெல்லாம், 'இதெல்லாம் பணக்காரப் பிள்ளைங்க படிக்கிற காலேஜ். நம்ம குழந்தைங்கள எப்படி இங்கெல்லாம் படிக்க வைக்க முடியும்?' என்று பல முறை ஏங்கியிருக்கிறாள். இரண்டு மகள்களில் ஒருத்தியையாகிலும் இந்தக் கல்லூரியில் படிக்க வைத்தேத் தீர வேண்டும் என்ற கனவு அவளுக்குள்.


பெரியவள் கல்லூரி முடித்துப் பட்டம் வாங்கிய போது, பெரிதும் மகிழ்ந்தனர் குடும்பத்தார் அனைவரும். குடும்பத்திலேயே முதல் பட்டதாரி, அதுவும் பெண் பட்டதாரி என்பதாலும், அவள் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றாள் என்பதாலும் அவர்களுக்கு எல்லாம் இரட்டிப்பு சந்தோஷம். அந்த மகிழ்ச்சி தந்த தைரியத்தில் சின்னவள் சௌம்யாவையும் அதேக் கல்லூரியில் படிக்க வைக்க வேண்டும் என்று மனதினுள் கனவும் கண்டு கொண்டாள். அவளது கனவு மெயப்பட்டதோடு மட்டுமின்றி, சௌமியா, வகுப்பின் சிறந்த மாணவியாகவும், முதல் மாணவியாகவும் தேர்ச்சி பெற்று, இன்று நிகழ்ச்சியில் தங்கப் பதக்கமும் பெறப் போகிறாள் என்ற நினைப்பு, அவள் தாயின் கண்களை நிரப்பியது.


தங்கப் பதக்கத்தைச் சுமந்து கொண்டு நடந்து வந்த அவளை, கண் கொட்டாமல் பார்த்துக் கொண்டிருந்தாள் அவள் தாய். தன் குடும்பத்தார் அமர்ந்திருந்த இருக்கையை நெருங்கும் போது அத்தனை ஆனந்தம் அவளினுள். அவளின் சகோதரி, "கங்கிராட்ஸ்" என்று வாயசைக்க, அவளைப் பார்த்து வெறும் கண்களை மட்டும் சிமிட்டி விட்டு இருக்கைக்குச் சென்றாள். நிகழ்ச்சி முடிவுற்ற பிறகு, தன் அம்மாவை நோக்கி ஓடினாள் சௌமியா. கையிலிருந்த தங்கப் பதக்கத்தைத் தன் தாயின் கழுத்தில் அணிவித்து, "அம்மா இது உங்களுக்குத் தான்" என்று சொல்லி, ஒரு முத்தம் வைத்தாள். இந்தக் காட்சியை அவளின் சகோதரி அவளது கேமராவில் பதிவு செய்ய, அம்மாவும் மகளும் கலங்கிய கண்களோடு புன்னகைத்தனர். அங்கு "கண்ணீரும் தித்தித்தது!" :-)

10 comments:

ny said...

mighty!!

Arasi Raj said...

"கண்ணீரும் தித்தித்தது!" :-) ///******

அருமை....

சௌம்யாவிற்கும் அம்மாவிருக்கும் வாழ்த்துகள்

புன்னகை said...

@kartin,
வருகைக்கு நன்றி :-)

**********

@Manu,
//கலக்கிட்ட மா கண்ணு...தூள் பண்ணிடே போ//
டாங்க்ஸ் அண்ணாத்த! ;-)

**********

@நிலாவும் அம்மாவும்,
நன்றி!

ILA (a) இளா said...

போட்டிக்கான வாழ்த்துக்கள்!

Anonymous said...

இந்த சின்ன வயசுல சுயசரிதை எழுத ஆரம்பிச்சாச்சா???? வாழ்த்துக்கள்....

புன்னகை said...

@ILA,
நன்றிங்க!

**********

@baskar,
இப்படியெல்லாம் பப்ளிக்கா காமடி பண்ணக் கூடாது. சுய சரிதையெல்லாம் ஒன்னும் இல்லைங்க பாஸ்கி! ;-)
சங்கமம் போட்டிக்காக ஒரு சின்ன முயற்சி மட்டும் தான் இந்தப் பதிவு.

biskothupayal said...

தலைப்பிலேயே பின்னிட்டிங்க

போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள்

Truth said...

சங்கமம் போட்டியில் டாப் 10 வந்து கலக்கிட்டே :-) வாழ்த்துக்கள்.

புன்னகை said...

@biskothupayal,
நன்றிங்க! :-)

புன்னகை said...

@Truth,
எல்லாம் உங்க ஆசிகள் தாங்க :-)