Thursday, March 19, 2009

ஒரு தாயின் கல்லூரிக் கனவு

"அம்மா, 5 மணிக்கு புரோகிராம் தொடங்கிடுவாங்க, சீக்கிரம் வந்துடுங்க, இல்லைனா பின்னாடி தான் உட்கார இடம் கிடைக்கும்" என்று சொல்லிக் கொண்டே, காலணியை மாட்டிக் கொண்டிருந்தாள் சௌமியா. "அக்கா எப்போ வருவா? அவளையும் கரெக்ட் டைம்க்கு வந்துட சொல்லுங்க, நான் கெளம்பறேன்" என்று காலில் சக்கரம் கட்டாத குறையாய் பறந்தாள். இன்று தான் அவளை எல்.கே.ஜி. சேர்க்க, பள்ளியில் சென்று விட்டு வந்தார் போல் தோன்றுகிறது, அதற்குள் கல்லூரி முடித்து, இதோ இன்று பட்டம் பெறுகிறாள்.


குடும்ப சூழ்நிலைகள் காரணமாக, படிக்கும் ஆர்வமிருந்தும் கல்வியைத் தொடர முடியாமல் போனதால், தன் குழந்தைகளையாகிலும் நன்கு படிக்கவைக்க வேண்டுமென்ற ஆர்வம் சௌமியாவின் பெற்றோர் இருவருக்குமே இருந்தது. மூத்த மகள் பள்ளிப்படிப்பை முடித்தவுடன், அவளைக் கல்லூரிக்கு அனுப்புவது அவர்களுக்கு பெரும்பாடாய்ப் போனது. கல்லூரியில் சென்று படித்தால் தான் கொஞ்சமாகிலும் அவளுக்கு உலக ஞானம் வரும் என்பதால், அவளை மிகவும் கட்டாயப்படுத்தி தான் கல்லூரியில் சேர்த்தனர். கல்லூரியில் சேர்ந்த பிறகு அவள் கொஞ்சம் பக்குவப்படத் தொடங்கினாள் என்பதும் அவர்கள் எதிர்பார்த்தபடியே நடந்தது.


தொலைகாட்சி நிகழ்ச்சி ஒன்றில் கல்லூரி மாணவர்களுக்கான பாட்டுப் போட்டி நடந்து கொண்டிருக்க, மகள்களின் கல்லூரி மாணவிகள் பாடி முடித்ததும், "அருமையா பாடினாங்க இல்ல?" என்றால் சௌமியாவின் தாய். அவளை வம்பிற்க்கிழுப்பது என்ற முடிவிலிருந்த சௌமியா, "இல்லம்மா, எங்க காலேஜ் செம்ம சொதப்பல், நீ வேணும்னா பாரேன், கண்டிப்பா தோற்க போறாங்க" என்று சொல்ல, "இல்ல இல்ல, உங்க காலேஜ் தான் கண்டிப்பா ஜெயிக்கும் பாரு" என்றாள். "அந்தக் காலேஜ்ல படிச்ச எங்களைவிட உங்களுக்கென்ன அப்படி ஒரு மோகம் எங்க காலேஜ் மேல" என்றாள் சௌமியாவின் அக்கா. "அக்காவைப் பெண் பார்க்க வரவங்க, 'பொண்ணு என்ன படிச்சிருக்குனு?' கேட்டா, அம்மா ஸ்டெல்லா மாரிஸ் காலேஜ்ல பி. எஸ். சி படிச்சான்னு தான் சொல்லுவாங்க" என்று தாயைக் கேலி செய்தாள் சௌமியா. உடனே அவளின் சகோதரியும் அவளுடன் சேர்ந்து கொண்டு, "அது மட்டுமில்ல, சின்னவ கூட அதே காலேஜ் தான், இதையும் சேர்த்து தான் சொல்லுவாங்க" என்று அவள் பங்கிற்கு அவள் அம்மாவைக் கிண்டலடித்தாள்.


பள்ளி விடுமுறைகளில் குழந்தைகளை அழைத்துக் கொண்டுத் தாய் வீட்டிற்கு செல்வது வழக்கமாயிருந்தது சௌமியாவின் தாய்க்கு. இராயப்பேட்டையில் இருந்த அவளின் தாய் வீட்டிற்கு செல்லும் போது, இந்தக் கல்லூரியைக் கடக்கும் போதெல்லாம், 'இதெல்லாம் பணக்காரப் பிள்ளைங்க படிக்கிற காலேஜ். நம்ம குழந்தைங்கள எப்படி இங்கெல்லாம் படிக்க வைக்க முடியும்?' என்று பல முறை ஏங்கியிருக்கிறாள். இரண்டு மகள்களில் ஒருத்தியையாகிலும் இந்தக் கல்லூரியில் படிக்க வைத்தேத் தீர வேண்டும் என்ற கனவு அவளுக்குள்.


பெரியவள் கல்லூரி முடித்துப் பட்டம் வாங்கிய போது, பெரிதும் மகிழ்ந்தனர் குடும்பத்தார் அனைவரும். குடும்பத்திலேயே முதல் பட்டதாரி, அதுவும் பெண் பட்டதாரி என்பதாலும், அவள் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றாள் என்பதாலும் அவர்களுக்கு எல்லாம் இரட்டிப்பு சந்தோஷம். அந்த மகிழ்ச்சி தந்த தைரியத்தில் சின்னவள் சௌம்யாவையும் அதேக் கல்லூரியில் படிக்க வைக்க வேண்டும் என்று மனதினுள் கனவும் கண்டு கொண்டாள். அவளது கனவு மெயப்பட்டதோடு மட்டுமின்றி, சௌமியா, வகுப்பின் சிறந்த மாணவியாகவும், முதல் மாணவியாகவும் தேர்ச்சி பெற்று, இன்று நிகழ்ச்சியில் தங்கப் பதக்கமும் பெறப் போகிறாள் என்ற நினைப்பு, அவள் தாயின் கண்களை நிரப்பியது.


தங்கப் பதக்கத்தைச் சுமந்து கொண்டு நடந்து வந்த அவளை, கண் கொட்டாமல் பார்த்துக் கொண்டிருந்தாள் அவள் தாய். தன் குடும்பத்தார் அமர்ந்திருந்த இருக்கையை நெருங்கும் போது அத்தனை ஆனந்தம் அவளினுள். அவளின் சகோதரி, "கங்கிராட்ஸ்" என்று வாயசைக்க, அவளைப் பார்த்து வெறும் கண்களை மட்டும் சிமிட்டி விட்டு இருக்கைக்குச் சென்றாள். நிகழ்ச்சி முடிவுற்ற பிறகு, தன் அம்மாவை நோக்கி ஓடினாள் சௌமியா. கையிலிருந்த தங்கப் பதக்கத்தைத் தன் தாயின் கழுத்தில் அணிவித்து, "அம்மா இது உங்களுக்குத் தான்" என்று சொல்லி, ஒரு முத்தம் வைத்தாள். இந்தக் காட்சியை அவளின் சகோதரி அவளது கேமராவில் பதிவு செய்ய, அம்மாவும் மகளும் கலங்கிய கண்களோடு புன்னகைத்தனர். அங்கு "கண்ணீரும் தித்தித்தது!" :-)

Monday, March 2, 2009

தொடர் பதிவு - வழக்கொழிந்த தமிழ்ச் சொற்கள்

கண்ட நாள் முதலாய் ஒன்னும் பெருகலனு, சும்மா இருக்க முடியாம சின்னப் பொண்ணு, அதுவும் ஒரே ஊர்ர்க்காரப் பொண்ணுனு கூட பாக்காம, "எங்கயோ போற மாரியாத்தா, என் மேல வந்து ஏறாத்தா" கதையா, வம்புக்கு இழுதுட்டாரு நம்ம Truth! வீண் வம்புக்கு போகலனாலும், வந்த சண்டையைக் கூட சும்மா விடும் அளவுக்கு நான் ஒன்னும் "அவ்வளவு சமத்துப் புள்ள" இல்லைன்னு அவருக்கு நல்லாத் தெரியும். ஆக, "நானும் ரௌடி, நானும் ரௌடி"னு இதோ கிளம்பிட்டேன்!

என்னைப் போன்று சங்கமிலாமலே சென்னைத் தமிழ் வளர்ப்போரை "வழக்கொழிந்த தமிழ்ச் சொற்கள்" என்று யோசிக்க வைத்ததற்கு முதலில் ஒரு பெரிய நன்றி! வழக்கொழிந்த தமிழ்ச் சொற்களா என்று யோசிக்கும் போது உணர்ந்த ஒரு விஷயம், "வழக்கொழிந்த" என்ற வார்த்தையும் கூட இப்பொழுதெல்லாம் வழக்கில் இல்லை என்பது. தமிழே "டமில்" ஆன பிறகு, "அரசியல்ல இதெல்லாம் சாதாரணம்" என்று தான் தோன்றுகிறது. "தமிழ் இனி மெல்லச் சாகும்!" என்று என்றோ பாடிச் சென்றான் அந்த முண்டாசுக் கவிஞன்! எத்தனைப் பெரிய தீர்க்கதரிசி அவன் என்று வியந்து கொண்டேன்.

தமிழ் ஆர்வம் கொண்ட, உடன் பணிபுரியும் நண்பர் ஒருவரோடு இதைப்பற்றி பேசிக் கொண்டிருந்த போது, "என்ன எழுதப் போகிறீர்கள்?" என்று அவர் கேட்க, "ஒரு பெண்ணாக, என்னைப் பொறுத்தவரை, அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு இவை தான் வழக்கொழிந்த தமிழ்ச் சொற்கள்" என்று நான் யதார்த்தமாக பதிலளிக்க, "இதைத் தான் ஆங்கிலத்தில் irony என்று சொல்வார்கள்" என்றென்னை ஏளனம் செய்ய, அருகிலிருந்த அனைவரும் சிரித்துவிட்டனர். பிறகவர், "வள்ளுவரைப் படிங்க, கண்டிப்பா உதவி பண்ணுவார்" என்று ஒரு யோசனை கொடுக்க, வள்ளுவர் பாவம், என்னிடம் படாத பாடுபட்டு தான் போனார் என்பது மறுக்கவியலாத உண்மை!

வள்ளுவத்தை முட்டி மோதியதில், சிதறிய சில பொக்கிஷங்கள், இதோ, இங்கே உங்களுக்காக; எனக்காகவும் தான்! :-)
  • அணங்கு - பெண்
  • அழல் - சூடு
  • உவகை - சந்தோஷம்
  • சாக்காடு - இறப்பு

அறிவுரை சொல்வதற்க்கெல்லாம் ஒரு தகுதி வேண்டும் என்பது என் கருத்து. ஆக, அறிவுரையெல்லாம் ஒன்றும் சொல்லப் போவதில்லை நான். இந்த யுகத்துப் பெண்களுக்கு ஒரு வேண்டுகோள் மட்டுமே உள்ளது என்னிடம். "ஈன்று புறந்தருதல்" மட்டுமே கடமை என்றிருந்து விடாமல், தாய்ப்பாலோடு சேர்த்து உங்கள் குழந்தைகளுக்கு, இயன்றவரை தமிழ்ப்பாலையும் ஊட்டப் பழகிடுங்கள். இது கூட மொழிக்காக நீங்கள் செய்யும் விஷயமில்லை; ஒரு மனிதனின் உணர்வுகளை வெளிப்படுத்த, அவனது தாய் மொழி போல் வேறெந்த மொழியும் பயன்படாது என்பதால், உங்களின் குழந்தைகளின் எதிர்காலத்திற்கு ஒரு நல்ல விஷயத்தை செய்வதாக எண்ணிச் செயல்படுங்கள். "Johnny Johnny"-யைக் காட்டிலும் சிறந்த ஆத்திச்சூடியைக் குழந்தைகளுக்குக் கற்றுக்கொடுக்கலாம். மொழிப் பற்றென்பது, வெறும் பேச்சளவில் இல்லாமல், உயிரில், உணர்வில் கலந்த ஒன்றாய் இருந்தால், நம் மொழியுடன் சேர்ந்து நாமும் சிறப்படைவோம் என்பதில் எந்த ஐயப்பாடுமிலை. [ஒரு வழியா கருத்து சொல்லியாச்சு!] ;-)

அடுத்து யாரை அழைப்பது என்பதில் மட்டும், கொஞ்சம் கூட சிந்திக்கத் தேவையிருக்கவில்லை எனக்கு! Synapse ப்ரியா அக்கா மீது இருக்கும் அளவு கடந்த நம்பிக்கை தான்! ஆக, நான் இந்தத் தொடர் பதிவை எழுத அழைப்பது, Synapse ப்ரியா. [எனக்கு உங்களை விட்டா வேற யாரு இருக்கா?] :-)