Thursday, October 8, 2009

என்னவருக்காக...

ஆரியம் திராவிடம் என்ற வேறுபாடுகளைக் கடந்து சில விஷயங்கள் என்னை வெகுவாக ஈர்ப்பதுண்டு. அப்படிப்பட்ட ஒன்று தான் "கர்வா சௌத்" விரதமும் கூட. திருமணம் முடிந்த பெண்கள், திருமணத்தை எதிர்நோக்கி இருக்கும் பெண்கள் என அவரவர் தத்தம் கணவருக்காக காலை முதல் கடும்விரதம் மேற்கொண்டு மாலையில் நிலவினை சல்லடை கொண்டு பார்த்து, பிறகு அவர்களின் கணவரைப் பார்த்து விரதத்தை முடிப்பர். கடும்விரதம் என்பது, தண்ணீர் கூட அருந்தாமல்! DDLJ, 7G ரெயின்போ காலனி போன்ற திரைப்படங்களில் இந்த விரதம் பற்றி பார்த்த பொழுதே இதன் மீது ஒரு பற்று ஏற்பட, கல்லூரியில் உடன்பயின்ற வட இந்தியப் பெண் அவளது ஏழாம் வயது முதலே இந்த விரதத்தை மேற்கொள்வதாகச் சொல்ல, கல்லூரி முடித்த ஆண்டிலிருந்து இந்த விரதத்தைக் கடைபிடிக்க ஆரம்பித்துவிட்டேன்.

நாம் உண்ணும் உணவில் இருக்கும் glucose-இல் ஒரு பங்கு நமதுடலில் glycogen-ஆக சேமித்து வைக்கப்படும். அது விரதம் மேற்கொள்ளும் நேரங்களிலும், உடல் நிலை சரியில்லாத நேரங்களிலும் glucose-ஆக மாற்றப்பட்டு, உடலுக்குத் தேவையான சக்தியைத் தரும். ஆனால் அந்த glycogen-ஐ glucose-ஆக மாற்ற தண்ணீர் தேவை. அதனால் தான் விரதமிருப்போரை அதிகமாகத் தண்ணீர் பருக வேண்டும் என்று சொல்வார்கள். ஆனால் தண்ணீர் கூட பருகாமல் இருப்பதால், இந்த விரதத்தின் போது மிகுந்த அயர்வு ஏற்படும். இவ்விதமான அயர்வுகளில் மேலும் உடல் தளர்ந்து போகாமலிருக்க, பெண்களின் மன நிலையைச் சீராக்க, மருதாணி அணிதல் நல்லது என்ற பழக்கத்தையும் ஏற்படுத்தினர். மருத்துவ ரீதியாக, மருதாணியின் குளுமை உடல் சூட்டைத் தணிக்க வல்லது. கர்வா சௌத் விரதம் மேற்கொள்ளும் போது கையில் மருதாணி இட்டுக் கொண்டால் நல்லது என்று கூறுவது இதற்குத் தான்.

கர்வா சௌத் விரதம் மேற்கொள்வது ஒரு பெரிய விஷயம் என்றால், கர்வா சௌத் தினத்தில் நிலவைப் பார்ப்பதென்பது பகீரதத் தவம்! சாதாரண நாட்களில் மாலை ஏழு மணிக்கெல்லாம் குளிர் முகம் காட்டும் நிலவு, இரவு பத்து மணியான போதும் எங்கிருக்கிறது என்று கண்டுபிடிக்க இயலாத வண்ணம் மேகங்களுக்கிடையே சென்று ஒளிந்து கொள்ளும்; நம்மையும் கொல்லும்! போதாக் குறைக்கு அன்று தான் அளவுக்கு அதிகமாக மேக மூட்டம் காணப்படும். இந்த நான்கு ஆண்டுகளில் பதினோர் மணிக்குக் குறைந்து ஒரு முறை கூட நிலவைப் பார்த்ததில்லை நான். நேற்று தான் புதிய சாதனை. இரவு 10.45 மணிக்கு அருள் புரிந்ததெனக்கு.

இன்று காலையில் அலுவலகம் வந்த பின்பு, அனைவரின் கவனமும் என் மீது தான். காரணம் உடல் நிலை சரியில்லாமல் போக, குறைந்தது ஆறு மாத காலத்திற்கு விரதம் ஏதும் இருக்கக் கூடாது என்று மருத்துவர்கள் வலியுறுத்தியும், நேற்று நான் இந்த விரதத்தை மேற்கொண்டேன். பயணத்தின் போது அயர்வு ஏற்படலாம் என்று விடுப்பு எடுத்து வீட்டிலிருந்துவிட்டேன். இன்று அனைவரும் கேட்ட கேள்வி, "நிலவைப் பாத்துட்டு யாரப் பாத்த?" என்று. அனைவருக்கும் ஒரு புன்னகையால் பதிலளித்துவிட்டு இருக்கைக்கு வந்தேன்.

என்னவர் எப்படிப்பட்டவர் என்பதை அறிந்த பிறகு தான் அவருக்காக நான் விரதங்கள் மேற்கொள்ள வேண்டும் என்று பிறர் கூறுவதில் எனக்குக் கொஞ்சமும் கூட உடன்பாடில்லை. இதனை இதனால் இவன் முடிக்கும் என்றாய்ந்து அதனை அவன்கண் விட இது அரசியல் இல்லையே. எனக்காக வரவிருப்பவர் இன்னார், இத்தகைய குணமுடையவர் என்றெல்லாம் தெரிந்த பிறகு அவர் மீது வைக்கும் பாசம் நேசமும் அவ்வளவு உண்மையானதாக இருக்குமா என்று தெரியவில்லை எனக்கு. அதனால், அவர் இன்னார் என்று தெரியும் முன்னமே அவரை நேசிக்கத் துவங்கிவிட்டேன், அவர் எனக்கான என்னவர் என்ற ஒரு காரணத்திற்காக மட்டும்! இதைத்தவிர திடமான உண்மை வேறேதும் தேவையில்லை என்பதாலும். என்னவர் எங்கிருந்த போதிலும், அவரிடம் சொல்ல விழையும் செய்தி ஒன்று மட்டும் தான்...

காதலிக்கிறேன்! Truly, madly, deeply!!! :-)

Saturday, October 3, 2009

நான் வந்துட்டேன்!

எனக்குப் புகழ்ச்சி பிடிக்காதுன்னு சொன்னா, கேட்டா தானே? கடைசியா எழுதின பதிவப் படிச்சிட்டு இந்த கார்க்கி சும்மா போகாம, தேவையில்லாத விளம்பரம் பண்ண, ஊர்க் கண்ணு பட்டு பிள்ளைக்கு உடம்பு சரியில்லாமா போயிட்டு (யாரு அந்தப் புள்ளன்னு கேட்க்கக் கூடாது சொல்லிட்டேன்!). இதுக்கு மேல நான் பதிவே போடக் கூடாதென்று இப்படி ஒரு கொலை வெறியானு தெரியல! வெறும் காய்ச்சல் என்று விடுப்பு எடுத்து, எங்க பிரம்மாண்ட ஊரில் ஒரு மருத்துவமனையைத் தேடிப் பிடிச்சு போனா, அந்த டாக்டரைப் பார்த்ததும், எனக்கு நம்பிக்கையே போச்சு. ஏதோ நான் வந்து மருத்துவம் பாத்து அவங்கள சுகமாக்குவேன்னு, உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு காத்திருந்த மாதிரி ஒரு முக பாவனை, உடல் வாகு சொல்லவே வேணாம்! தெர்மாமீட்டர் கூட உபயோகிக்காமல், வெறும் நாடி பிடிச்சு பாத்தாங்க. ஒரு நிமிஷம் பயந்தேப் போயிட்டேன், விபரீதமா ஏதும் சொல்லிடுவாங்களோன்னு தான்! தெய்வாதீனமாக ஏதும் சொல்லாமல், விறு விறுவென்று மருந்துகளின் பெயர்களை எழுதித் தந்தார். அவரின் பெயருக்குப் பின் நீண்டதொரு பட்டியல் இருந்தது. (அம்புட்டு படிசிருக்குங்கா போல!)

அடுத்த நாள் மாலை வரையிலும் காய்ச்சல் குறையாமல் போக, வேறு வழியின்றி அப்பாவை அழைத்துக் கொண்டு அயனாவரம் சென்றேன், வழக்கமாக பார்க்கும் மருத்துவரிடம் பரிசோதனைக்காக. என்னைப் பார்த்ததும், புருவங்களை உயர்த்தி, "என்னடீ இங்கயே திரும்ப வந்தாச்சா?" என்றார் சிரித்தபடியே. "இல்லைங்க ஆன்டி, காய்ச்சல்" என்றேன். அந்த மருத்துவர் எழுதித் தந்த மருந்துச்சீட்டை அவரிடம் காட்ட, "எதுக்கு பேரசிடமால் மாத்திரையே ரெண்டு? என்று புரியாமல் வினவினார். "உங்களுக்கேத் தெரியலனா, எனக்கு எப்படி ஆன்டி தெரியும்" என்று காய்ச்சலிலும் அவரை வம்பிழுக்காமல் இருக்க முடியவில்லை. மூன்று நாட்களுக்கு மருந்துகளை எழுதிக் கொடுத்து, "பன்றிக் காய்ச்சல் எல்லாம் இல்லடீ, பயப்படாத" என்றார் சிரித்துக் கொண்டே. நானும் பதிலுக்கு, "தெரியும் ஆன்டி, அது மனுஷங்களுக்கு தான் வரும்னு சொன்னாங்க, அதனால எனக்குக் கொஞ்சம் கூட பயமில்ல" என்று சொல்லிவிட்டு கிளம்பினேன்.

மூன்று நாட்கள் முடிந்தும் காய்ச்சல் குறையாமல் போக, இரத்தப் பரிசோதனை செய்யச் சொன்னார்கள். அடுத்த கட்ட சோதனை. ஒரு பெரிய ஊசியில் ரத்தத்தை எடுத்து, நான்கு குழாய்களில் ஊற்றி விளையாடிக் கொண்டிருந்தார் அந்தப் பரிசோதகர். வந்த கோபத்திற்கு அந்த மனுஷனைக் கொன்று போடத் தோன்றியது எனக்கு. அடுத்த நாள் முடிவுகள் வந்ததும் பார்த்துக் கொள்ளலாம் என்று விட்டுவிட்டேன். மறுநாள் வந்ததெனக்கு அந்தக் கெட்ட செய்தி. டைபாய்டு காய்ச்சல் என்றும், உடலில் அதனளவு அதிகமாய் இருத்தினால் மூன்று நாட்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவது நல்லதென்றும் சொன்னார் மருத்துவர்! அன்று அமாவாசைக்கு முதல் நாள் என்பதால், அம்மா அமாவாசை அன்று மருத்துவமனைக்குச் செல்லலாம் என்று முடிவு செய்தார். அந்த ஒரு நாள் முழுதும் எனக்கு தூக்கம் வரவேயில்லை. வீட்டிலேயே இருக்கிறேன் என்று எவ்வளவு போராடியும், யாரும் கேட்பதாய் இல்லை. என்னை முழு மூச்சாக ஒரு நோயாளி ஆக்க வேண்டும் என்று உறுதியோடு இருந்தார்கள்.

மறுநாள் அண்ணா நகரில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டேன். என்னை அறைக்கு அழைத்துச் சென்ற செவிலியர், என்னுடன் வரும் போதே தேவையான ஊசிகளையும் மருந்துகளையும் எடுத்துக் கொண்டார். அது அனைத்தையும் விட என்னை அலறச் செய்தது Venflon தான்! கையில் ஏதோ ஒரு குழாயைப் போடுவதைப் போல் சர்வசாதாரணமாக அதில் ஒவ்வொரு மருந்தாகச் செலுத்தத் தொடங்கினார்கள். அப்பாவை வீட்டிற்குப் போகும்படி சொல்லிவிட்டு, மாலை வரைத் தனியாய் இருந்தேன். பிறகு மூன்று நாட்கள் கட்டாயம் இருந்தாக வேண்டும் என்று அங்கும் சொல்ல, வேறு வழியின்றி மூன்று நாட்கள் நானும் நோயாளியானேன்!!!



மூன்று நாட்களில், இரண்டு பாட்டில் ட்ரிப், இருபது ஊசிகள், நாற்பது மாத்திரைகள் என்று படாத பாடுபட்டுப் போனேன். போதாக் குறைக்கு, இடது கை வீக்கம் கொள்ள, அதிலிருந்த Venflon-ஐ எடுத்துவிட்டு, வலது கையில் வேறொரு புது Venflon போடப்பட்டது. குண்டூசி குத்தி ரத்தம் வந்தாலே ஒரு பெரிய ஒப்பாரி வைத்து, மூன்று நாட்களுக்கு மருந்து வைத்துக் கட்டும் தைரியசாலிப் பெண் நான். இந்த அழகில் இரண்டு கையும் Venflon-ஆல் பதம் பார்க்கப்பட்ட போதும் கொஞ்சம் கூட கண்ணீர் வரவில்லை. (ஒரு வேளை, அம்மா சொல்ற மாதிரி நான் வளந்துட்டேனோ???) இந்த இம்சைகளை எல்லாம் விட பெரிய கொடுமையொன்று எனக்காகக் காத்திருந்தது. மருத்துவமனையிலிருந்து செல்லும் முன், ஒரு பெரிய NO பட்டியலிட்டார் மருத்துவர். அதிலிருந்த அனைத்தும் நான் விரும்பி உண்ணும் விஷயங்கள் மட்டும். ஆகா, அஸ்திபாரம் ஆட்டம் கொண்டது! உடல் நலம் விசாரிக்கும் அனைவரிடமும் சொன்ன ஒரே விஷயம், "My life is not gonna be spicy for the next six months :-(" என்று.

காய்ச்சல் ஆரம்பித்த பதினைந்து நாட்கள் முடிந்ததுமே வேலையில் சேர்ந்து விட்டேன். உடலில் கொஞ்சம் கூட தெம்பிருக்கவில்லை. எங்கேனும் விழுந்து விடுவேன் போல் தோன்ற, வழி நெடுக பிரார்த்தனைகளோடு தொடர்ந்தேன் என் பயணத்தை. மனதில் மட்டும் தெம்பு குறையாமலிருக்க ஒரு வழியாக அலுவலகம் சேர்ந்தேன். என் உடல் நலன் மேல் அக்கறை கொண்டு, கிளை அலுவலகத்திற்குப் போக வேண்டாம் என்று சொல்லிவிட்டனர். இதோ, ஒரு மாத காலமாக, எங்களின் தலைமை அலுவலகத்திற்கு வந்து கொண்டிருக்கிறேன். உடல் நிலை கொஞ்சம் தேறினாலும், உணவுப் பழக்கங்களில் பெரிதாய் ஒரு மாற்றமும் இல்லை. இப்படிக் கடும் பத்தியம் இருந்தும் கூட ஒரு அங்குலம் கூட குறையவில்லை உடல் மட்டும். என்னைப் பார்ப்பவர்கள் எல்லாம் கேட்கும் ஒரே கேள்வி, "டைபாய்டு வந்தா எல்லாரும் மெலிஞ்சுடுவாங்கனு சொல்வாங்க? உன்னப் பாத்தா அப்படி தெரியலியே?" என்று எல்லாரும் கேட்க, மிகுந்தக் கடுப்போடு இருக்கிறேன்.

இப்போதைக்கு எனக்கிருக்கும் ஒரே ஆறுதல், ரயில் பயணங்கள் மட்டும் தான். ஆமாம், இப்பொழுதெல்லாம் மூன்று பேருந்துகள் மாறி அலுவலகத்திற்குச் செல்ல வேண்டியதில்லை. வீட்டின் அருகிலேயே ரயில் நிலையம் இருப்பதால், இப்பொழுது பயணங்களில் அயர்வு ஏற்படுவதில்லை. மட்டுமலாமல், உடன் பணிபுரிவோரில் இருவர் துணை வேறு! எங்கும் வாயோயாமல் பேசியபடியே செல்வதால், கொஞ்சம் தெம்பு கூடிவிட்டது உடலில். இருக்காத பின்ன, சாப்பாடு இல்லாமல் கூட உயிர் வாழ்ந்திடுவேன், பேசமாலிருந்தால் கொஞ்சம் கஷ்டம் தான். நல்ல விஷயமாக பிற மொழிகள் பேசக் கற்றுக் கொள்ளத் துவங்கியுள்ளேன். தேசிய மொழி தான் முதல் பலியாடு! அதற்காகப் பதிவெழுதுவதை நிறுத்தி விட்டு, உங்களையெல்லாம் நிம்மதியாக வாழ விடுவேன் என்ற பேராசை வேண்டாம். ரயில் பயணங்களில் பல சுவாரசியமான நிகழ்வுகள் உள்ளன. ஒவ்வொன்றாக நேரம் கிடைக்கும் போதெல்லாம் பதிவுகிறேன்.

பி. கு: தமிழ் இனி மெல்லச் சாகும்! :-)