Monday, May 24, 2010

எக்ஸாம் ஃபியர்? Not here!

ஒவ்வொரு கால கட்டத்திலும் தேர்வுகளை எப்படி எதிர்கொண்டோம் என்பதைப் பற்றி எழுத, இந்தத் தொடர் பதிவிற்கு என்னை அழைத்த ஆதி அவர்களுக்கு நன்றி! (இதுக்கு என்ன அர்த்தம்னா, எனக்கும் ஒரு காலம் வரும், அப்போ நான் உங்கள இப்படி பிரச்சனைல மாட்டிவிடுவேன்னு!). தேர்வுகள் குறித்த பயமோ, பதட்டமோ ஆரம்ப காலம் முதலே எனக்கிருந்ததில்லை. சிறுவயது முதலே படிப்பில் படுசுட்டி என்பதால் எல்லாரிடமும் நல்ல பெயர். Teachers' pet நான்! அப்பாவிற்கு கணிதமும், அம்மாவிற்கு ஆங்கிலமும் எட்டிக்காய். பாவம் அக்கா, இவை இரண்டுமே அவளுக்கும் தீராத சோகம் தரும் பாடங்கள். நானோ இரண்டிலும் மிகுந்த ஆர்வம் கொண்டவள். பள்ளிக்காலங்களில் அக்கா அப்பாவிடம் வாங்கும் திட்டுகளையும் அடிகளையும் பார்த்துப் பரிச்சயமானதால், எனக்குப் பாடம் சொல்லிக் கொடுக்க அம்மாவிடம் தான் தஞ்சமடைந்தேன்.

ஐந்தாம் வகுப்பு வரை அயன்புரத்தில் உள்ள ஒரு சிறிய பள்ளியில் தான் படித்தேன். அக்கா என்னை விட ஐந்து வயது மூத்தவள். நாங்கள் படித்த பள்ளி மேனிலைப் பள்ளியானதாலும், அக்கா +1 வேறு பள்ளியில் சேர வேண்டி இருந்ததாலும், என்னையும் வேறு பள்ளிக்கு மாற்றுவது என்று முடிவானது. அங்கு ஆரம்பித்தது பிரச்சனை. என்ன பிரச்சனையா? எனக்குப் பேருந்துப் பயணங்கள் என்றால் ஆகவே ஆகாது! புதுப் பள்ளியோ வேப்பேரியில். நாங்கள் வசித்ததோ அயன்புரத்தில். குறைந்தது 40 நிமிடப் பேருந்துப் பயணம்! என்னதான் school bus-இல் போகலாம் என்று அம்மா சமாதானம் செய்தாலும், "bus" என்ற வார்த்தையை நினைத்த பொழுதெல்லாம் எனக்கு வயிற்றைப் புரட்டியது! ஆக, பேருந்துப் பயணம் தான் நான் எதிர்கொண்ட மிகப் பெரிய பரீட்ச்சை!

முதல் நாள் புதுப்பள்ளிக்குப் போகும் போது எனது சாப்பாட்டுப் பையில் Poppins, ஒரு அம்ருதாஞ்சன் பாட்டில், பல வகையான புளிப்பு மிட்டாய்கள், எலுமிச்சை இன்னும் என்னவெல்லாம் வாந்தியைத் தவிர்க்கும் என்று அம்மா அறிந்திருந்தார்களோ அவை அனைத்தும்! எனக்கே என்னைப் பார்க்க பாவமாக இருக்கும். School bus-இல் வரும் ஒரு ஆசிரியையிடம் என் நிலை விளக்கப்பட்டு ஜன்னலருகே ஒரு இருக்கை எனக்கென ஒதுக்கப்பட்டது. "Rome was not built in a day" என்பதைப்போல், எனதிந்த அவல நிலை மாற குறைந்தது ஈராண்டுகள் எடுத்தது. எப்படி எப்பொழுது என்றெல்லாம் நினைவில்லை. ஆனால் அந்த மாற்றம் என்னுள் நிகழ்ந்தது மட்டும் உறுதி. அக்கா தனது பள்ளிப் படிப்பு முடிந்து கல்லூரியில் சேர்ந்தாள். அதுவரை அவளின் துணையை நம்பியே இருந்த நான் தனியே பயணிக்க வேண்டிய கட்டாயம். அந்த நிர்பந்தத்தில் ஏற்பட்ட மன உறுதி தான் இன்னமும் எனது பயணங்களுக்கு ஆதாரம்! என்னால் இப்பொழுதெல்லாம் மணிக்கணக்கில் பேருந்தில் பயணிக்க முடியும்.

பள்ளிக்குப் போகும் போதும் வரும் போதும் தூங்கிக் கொண்டே இருந்தாலும் இந்தப் பள்ளியிலும் படிப்பில் மட்டும் தூங்கவில்லை. வழக்கம் போல் எனது முதலிடத்தைத் தக்க வைத்துக் கொண்டதோடு மட்டுமல்லாமல், பேச்சு போட்டிகளில் கலந்து கொண்டு எனது பேச்சுத் திறமையை வளர்த்துக் கொண்டேன். எட்டாம் வகுப்பு வரை வகுப்பில் முதல் மாணவியாகத் திகழ்ந்தேன். அதன் பிறகு நட்பு வட்டாரம் விரிய, படிப்பில் இருந்த கவனம் சரிந்தது. பத்தாம் வகுப்புப் பொதுத் தேர்வில் நான் மாநில அளவில் மதிப்பெண் எடுக்க வேண்டும் என்றெல்லாம் அம்மா கனவுகளில் மிதக்க, நானோ 465 மதிப்பெண்களுடன் (93 விழுக்காடு) பள்ளி அளவிலேயே இரண்டாம் மாணவியாகத் தான் வந்தேன். கணக்கில் மட்டும் 100 மதிப்பெண்கள் வாங்கியதில் அம்மா கொஞ்சம் ஆறுதல் அடைந்தார்கள்.

பனிரெண்டாம் வகுப்பில் Maths, Physics, Chemistry & Computer Science பிரிவினை தேர்வு செய்தேன். அந்த ஆண்டின் பள்ளியின் School Pupil Leader-ஆக நான் அறிவிக்கப்பட படிப்பில் இருந்த நாட்டம் சற்று குறைந்தது என்பதே உண்மை. என்னுடைய பனிரெண்டாம் வகுப்புப் பொதுத் தேர்வு நடந்த பொழுது உலகக் கோப்பைக் கிரிக்கெட் போட்டிகள் வேறு! இந்தியா இறுதிப் போட்டியில் கோட்டைவிட, அன்றிரவு முழுதும் அழுது வடிந்ததில், அடுத்த நாள் கணிப்பொறித் தேர்வில் நான் சொதப்பியது இன்னமும் நினைவைவிட்டு நீங்கவில்லை. காரணம், கணிதத்திலும் வேதியலிலும் ஈடுபாடு இல்லாமல் போனாலும், கணிப்பொறி பாடத்தில் எப்பொழுதும் முதல் மூன்று இடங்களை விட்டுக் கொடுத்ததில்லை. ஆனால், பொதுத் தேர்வில் வெறும் 156 மட்டுமே கணிப்பொறி பாடத்தில் வாங்கினேன். மொத்தத்தில் 951 மதிப்பெண்களே பெற்றேன்.

வேறு வழியின்றி ஸ்டெல்லா மாரிஸில் B.A History-இல் சேர்ந்தேன். Vocational பாடமாக Tourism இருந்ததால் நல்ல scope உள்ளது என்று அனைவரும் சொல்ல, எதிர்காலம் குறித்த ஒரு நம்பிக்கையுடன் இருந்தேன். என்னைப் பொறுத்த வரை, வரலாற்றுப் பாடங்கள் மிகவும் சுவாரசியமானவை. கற்பிப்பவர் மட்டும் விஷயம் தெரிந்தவராக இருந்தால், உங்களை அந்த காலத்திற்கே அழைத்துச் சென்று விளக்குவது போல இருக்கும். அப்படிப்பட்ட ஆசிரியர்கள் எனக்குக் கிடைத்தனர் என்பது எனது பாக்கியம்! வழக்கம் போல் எனது படிப்பின் மீது எனது நாட்டம் பெருக, அந்த ஆண்டின் Proficiency prize எனக்குச் சொந்தமானது!

கல்லூரி நாட்களின் தேர்வுகளை நினைக்கும் போது, கிரண் தானாகவே என் நினைவுக்கு வருகிறாள். கிரண் - எனது NRI தோழி. "Work hard, party harder" அவளது தாரக மந்திரம். ஒவ்வொரு தேர்வின் பொழுதும் படிக்காமல் வர அவளுக்கென்று ஒரு காரணம் இருக்கும். "It was Nikhil's bday last nite & I had to go. I reached home late in the nite & I din read ANYTHIN" என்று அவள் கொஞ்சிப் பேசும் போது யாருக்கும் பாவமாகத் தான் இருக்கும். எக்ஸாம் ஹாலின் வெளியே என்னை இழுத்து நிறுத்தி வைத்து, "Tel me somethin, tel me somethin" என்று அவசரப்படுத்துவாள். நான் முந்தைய இரவு முழுக்க கண் விழித்து படித்த எல்லாவற்றையும் ஒரு கதை போல் சொல்ல, "Go ahead, go ahead" என்று தலையாட்டி கேட்டுக் கொண்டு விட்டு "All de best babes" என்று கண்ணடித்து விட்டுச் செல்வாள். ஆனால் மதிப்பெண்கள் வழங்கப்படும் போது கண்டிப்பாக முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்று விடுவாள். காரணம், என்ன தான் அரட்டை ஆர்ப்பாட்டம் என்று நாங்கள் இருந்தாலும், வகுப்பில் கொஞ்சம் கூட கவனம் சிதறியதில்லை.

தேர்வுகள் என்னைப் பெரிதாக பாதிக்காமல் போனாலும், அதையொட்டி வருங்காலம் குறித்து நான் எடுக்க வேண்டிய முடிவுகளில் மூலம் என்னை ஓரளவுக்கு அவை நெறிப்படுத்தியுள்ளன என்பதே உண்மை. எல்லா காலங்களிலும் என்னை நெறிப்படுத்திய விஷயம், எனது பெற்றோர் எனக்களித்துள்ள சுதந்திரம்! நான் எடுக்கும் முடிவுகள் தெளிவானதாக இருக்கும் என்று அவர்கள் என் மீது வைத்துள்ள நம்பிக்கை தான் இன்னமும் நான் ஒவ்வொரு முறை முடிவெடுக்கும் பொழுதும் என்னை இன்னமும் சிந்தித்து முடிவெடுக்க வைக்கின்றன. வாழ்க்கை குறித்த ஒரே விஷயத்தை மட்டும் நினைவில் வைத்துக் கொண்டால், எந்த விதமான தேர்வுகளையும், எளிதில் எதிர்கொள்ளலாம்! அது,

Whatever blunder u make, the sky would not fall on your head! :-)

அடுத்த படியாக தலைவர் ட்ரூத் அவர்கள் எங்கிருந்தாலும் மேடைக்கு வரவும்.